நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும் , எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும் , விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும் , சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும் , செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும் , சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் மட்டுமே பொதுவானவை . ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான் .
ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி . மிகப் பெரும் வெற்றியாளன் . ஆனால் , எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன் . ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘ கங்காபுரம் ‘ நாவல் .